“இது எனது கனவு!” – அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யில் இணைந்த பிரசன்னா நெகிழ்ச்சி..!!

சமீபமாக அஜித் படம் அறிவிக்கப்படும் போது, ஒவ்வொரு முறையும் பிரசன்னா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகும். ஆனால், அதில் நடிக்கவில்லை என்று பிரசன்னா கூறிவந்தார். தற்போது, ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துடன் நடித்து வருவதை பிரசன்னா உறுதிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக பிரசன்னா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த முறை அஜித் சாரின் படத்தில் நான் ஓர் அங்கமாக இருப்பது உண்மை.

இது எனக்கு ஒரு கனவு. ‘மங்காத்தா’ படம் தொடங்கி ஒவ்வொரு முறை அஜித் படம் அறிவிக்கப்படும் போது, அதில் நானும் ஒரு அங்கமாக இருந்திருக்க வேண்டியது. ஆனால், அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து ஊகித்து, அவருடைய அடுத்த படத்தில் இருப்பதாக வாழ்த்தினார்கள்.

ஆனால் பலரும் கூறுவது போல் ‘கிண்ணத்துக்கும் உதடுக்கும் இடையில் பல சறுக்கல்கள்’ இருக்கிறது. நான் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அங்கமாக இருக்கிறேன். கடவுள், அஜித், ஆதிக், சுரேஷ் சந்திரா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் அஜித்துடன் நான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட அனைவருக்கும் நன்றி. இப்போதைக்கு வேறு எதுவும் கூற முடியாது, அதற்கு மன்னிக்க வேண்டும். நான் முதல் சில நாட்கள் நடித்துவிட்டேன்.

என்னால் ஒன்று மட்டும் சொல்ல முடியும். அஜித் சார் அவராகவே இருப்பதற்காக தான் நேசிக்கப்படுகிறார். அவரை பற்றி எனக்கும் உங்களுக்கும் தெரிந்தது தான். அவர் பணிவு நிரம்பியவர். அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இந்தப் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *