சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் குய் செங்ஹொங், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.
இதன்போது, ஜனாதிபதியின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு தூதுவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் இலங்கையின் எதிர்கால முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு சீனாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை தூதுவர் குய் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, இலங்கையின் அபிவிருத்தி முன்முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் சீன அபிவிருத்தி வங்கி மற்றும் எக்ஸிம் வங்கியின் செயலூக்கமான ஈடுபாட்டையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
இந்த இரண்டு நிறுவனங்களும் முக்கிய வர்த்தக மற்றும் இருதரப்பு கடன் வழங்குநர்கள் என்ற வகையில், கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் விரிவான உதவிகளை வழங்கும் என்று தூதுவர் குய் உறுதியளித்துள்ளார்.