இலங்கை குறித்து உறுப்பு நாடுகளிடம் ஐக்கிய நாடுகள் முன்வைத்துள்ள கோரிக்கை…!!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் ஈடுபட்ட எந்தவொரு தரப்பிலும், சர்வதேச குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் குற்றவாளிகள் மீது விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை (UN) கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடரானது ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இந்த பரிந்துரைக்கு ஒத்துழைக்குமாறு, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை கோரியுள்ளது.

மேலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச வலையமைப்புகள் மற்றும் பரஸ்பர சட்ட உதவி செயன்முறைகள், உயிர் பிழைத்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட, இலங்கையில் உள்நாட்டு போரில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு ஏனைய சர்வதேச சட்ட வழிவகைகளைப் பயன்படுத்துவதையும் பரிசீலிக்குமாறும் உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கைப்பிரஜைகள் தொடர்பான புகலிட நடவடிக்கைகளை மீளாய்வு செய்யவும், பழிவாங்கல்களை எதிர்கொள்பவர்களை பாதுகாப்பதற்காகவும், சித்திரவதை அல்லது பிற கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு உண்மையான ஆபத்தை முன்வைக்கும் வழக்குகளின் மறுபரிசீலனைகளிலிருந்து விலகியிருக்கவும் உறுப்பு நாடுகளை, மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், மனித உரிமைகள் அலுவலகம், தமது கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் மற்றும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் உட்பட்ட தமது பணிகளை தொடர ஆதரவையும் கோரியுள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் அமர்வின் ஆரம்ப நாளில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதன்படி, 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி, பேரவையின் 57அவது அமர்வு தொடங்கவுள்ளது.

இதன்போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் குறித்த அறிக்கை, சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *