கிரகங்களுக்கு இடையேயான ஆய்வுகளுக்காக இதுவரை உருவாக்கப்பட்ட விண்கலங்களில் மிகப்பெரியதான நாசாவின் யூரோபா கிளிப்பர் விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விண்கலமானது, வியாழன் கிரகத்தின் சந்திரனான யூரோபாவை ஆராய்வதற்காக கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது.
யூரோபா கிளிப்பரினால், ஈர்ப்பு உதவிகளை பயன்படுத்தி 1.8 பில்லியன் மைல்கள் பயணிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2030ஆம் ஆண்டில், வியாழனை அடைந்த பிறகு, அது யூரோபாவில் வாழக்கூடிய நிலத்தடி கடலை பற்றி ஆராய தொடங்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐஸ் – ஊடுருவக்கூடிய ரேடார் மற்றும் வெப்ப இமேஜிங் உள்ளிட்ட அதி நவீன கருவிகளுடன் பொருத்தப்பட்ட இந்த விண்கலம், நமது சூரிய குடும்பத்திலும் அதற்கு அப்பாலும் வாழும் தன்மை பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்க கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அதேவேளை, வியாழன் கிரகத்தின் சந்திரனான யூரோபாவில் உயிர்கள் வாழ முடியுமா என்பதைக் கண்டறிவதும் யூரோபா விண்கலத்தின் நோக்கமாக உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.