ரத்தன் டாடா காட்டிய வழி தொடரும் – பில்கேட்ஸ்..!!

தொழில் அதிபர் ரத்தன் டாடா கடந்த புதன்கிழமை (9) காலமானார். இந்தியத் தொழில்துறையில் அழியாத முத்திரை பதித்துள்ள டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு இந்தியா மற்றும் உலகப் பிரபலங்கள் பலர் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். சமூக மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய அரும் பணியை இணைய வாசிகள் புகழ்ந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், மறைந்த ரத்தன் டாடாவை நினைவுகூர்ந்து தனது ‘லிங்க்டு இன்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவிலும் உலக நாடுகளிலும் மக்களின் வாழ்க்கையையும் சமூகத்தையும் மேம்படுத்துவதில் அவரது அர்ப்பணிப்பு அளப்பரியது. தொலைநோக்குப் பார்வைகொண்ட அற்புதமான மனிதர் ரத்தன் டாடா. அவருடைய வலுவான நோக்கம் எப்போதுமே மனிதகுல மேம்பாட்டை முன்னிறுத்தியதாகவே இருக்கும்.

மக்களுக்கு ஆரோக்கியமும் வளமான வாழ்க்கையும் கிடைக்கும் வகையில் நாங்கள் இருவரும் பல வகைகளில் இணைந்து பணியாற்றியுள்ளோம்.

உலக மக்களின் நலனில் அக்கறை காட்டிய அந்த அருமையான மனிதரின் இழப்பை நம்மால் பல ஆண்டுகளுக்கு மறக்க முடியாது. அவர் காட்டிய வழி, பல தலைமுறைகளுக்கு முன்மாதிரியாக இருந்து சமூகத்தை மேம்படச் செய்ய வழிவகுக்கும் என்று பில்கேட்ஸ் பதிவிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *