முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (30) இரவு கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் இவ்விசேட சந்திப்பும் இரவு விருந்துபசாரமும் இடம்பெற்றது.
இதன்போது வருகைத் தந்திருந்த தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுடன் கௌரவ பிரதமர் நட்பு ரீதியாக கலந்துரையாடினார்.
இஸ்லாமிய நாடுகளுடனான இருதரப்பு உறவை தொடர்ந்து பேணுவதல் மற்றும் பரஸ்பர செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் ஊடாக இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்வது தொடர்பில் இதன்போது தூதுவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதாக இதன்போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் 15 தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஓமான், பலஸ்தீன், குவைத், சவுதி அரேபியா, மலேசியா, கடார், துருக்கி, ஈரான், லிபியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் மற்றும் மாலைதீவு, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாடுகளின் இலங்கை உயர் ஸ்தானிகர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.