“30ம் திகதி நாடு திறக்கப்படும் சாத்தியம்?” − சுகாதார அமைச்சர் இன்று (26) வெளியிட்ட கருத்து …
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, 30ம் திகதிக்கு பின்னர் நீடிக்கும் சாத்தியம் கிடையாது என்பதே, தனது தனிப்பட்ட கருத்து என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
நாட்டை முடக்கி, கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்பதனை, உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே, நாடு இம்முறை முடக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
நாட்டை முடக்கி, முன்னோக்கி செல்வது சிரமமானது என்பதே, உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளின் கருத்தாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை திறந்து வைத்த நிலையிலேயே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் இடத்திற்கு உலக நாடுகள் வந்துள்ளதாக அமைச்சர் கூறுகின்றார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து நாளைய தினம் (27) தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொவிட்−19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி நாளைய தினம் கூடி, இந்த விடயம் குறித்து ஆராயவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்….