நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பிலான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்னணி தனியார் வைத்தியசாலையிலிருந்து நேற்றைய தினம் (14) இந்த கைக்குண்டு மீட்கப்பட்டிருந்தது.
கைக்குண்டின் பாதுகாப்பு ஆணியை கழற்றி, நுளம்பு சுருளொன்றை இணைத்து, வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்கப்பட்டுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டிருந்தது.
இந்த கைக்குண்டு, வைத்தியசாலையின் முதலாவது மாடியிலுள்ள மலசலகூடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்த நிலையில், வைத்தியசாலைக்கு விரைந்த பொலிஸார், குண்டு செயலிழக்கும் பிரிவின் ஊடாக குண்டை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மூவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த வைத்தியசாலைக்கு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் பிரசன்னமாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விடயங்களை ஆராய்ந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன், விசாரணைகளை துரிதப்படுத்துமாறு விசாரணை குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமராக்களின் ஊடாக ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன…