இலங்கையில் இன்று முதல் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்று முதல் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1959 ஆம் ஆண்டு 8 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின், தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், இலங்கையின் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பொது ஒழுங்கைப் பாதுகாத்தல்
பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இலங்கையில் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.