இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
உயர்கல்வித் துறையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய கல்வி ஆணைக்குழு, கல்வி அமைச்சு உள்ளிட்ட அரசாங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்வேறு பல்கலைக்கழகங்களின் பிரதானிகள் உள்ளிட்ட உயர் கல்வித் துறையுடன் தொடர்புபட்ட நிபுணர்கள் இதில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
உயர்கல்வித் துறையின் விடயங்களைக் கையாழ்வதற்குத் தனியான மத்திய அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை குறித்து இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், தேவையான அமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளும்போது மேலதிகமான மாணவர்களை உள்ளீர்க்க முடியும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். உயர்கல்வியை விஸ்தரிப்பதற்கு கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுக்குத் தனியான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட வேண்டியதன் தேவையையும் அவர் இங்கு வலியுறுத்தினார்.
உயர்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் அவர் இக்குழு முன்னிலையில் முன்வைத்தார்.
இது தவிரவும், தேசிய கல்வி ஆணைக்குழு, கல்வி அமைச்சின் அரசு அல்லாத உயர்கல்வித் துறைப் பிரிவு மற்றும் கல்வி அமைச்சின் விசேட ஆலோசகர் உள்ளிட்ட பலரும் குழு முன்னிலையில் தமது பரிந்துரைகளை முன்வைத்தனர்.
இந்நாட்டில் இயங்கிவரும் அரசாங்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கும் குழு தீர்மானித்தது.