?”சுத்தமான நகரமொன்று – சூழல் நட்புறவான நாடொன்று” எனும் கொள்கைத்திட்டத்தின்கீழ், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் வகையில் கரவெட்டி முள்ளியில் நிர்மாணிக்கப்பட்ட பொறிமுறைச் சேதனபசளை தயாரிப்பு நிலையம், இன்று (27) மாலை 2 மணியளவில் திறந்துவைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.
மேலும் நிகழ்வில், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளரும், யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள், இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க , இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ , வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எச்.எம் சாள்ஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் பிரதேச சபை உறுப்பினர்கள், உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை இந்த நிகழ்வில் தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள், தாய் மற்றும் குடும்பத்தினரை, அமைச்சர் நாமல் ராஜபக்ச சந்தித்து பேசினார்.
மேலும் கடந்த 24ம் திகதி விடுதலை செய்யபட்ட கைதிகளில் ஒரு பகுதியினர், தமது நன்றியை அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு, தமது விடுதலையை சாத்தியப்படுத்திய அரசாங்கத்துக்கும் தெரிவித்ததோடு, மிகுதி கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உறவுகளால் அமைச்சரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய கவனம் எடுப்பதாக இதன்போது அமைச்சர், உறவுகளிடம் தெரிவித்தார்.