பால்மா, கோதுமைமா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்க்கை செலவுகள் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அமைச்சரவையின் அனுமதியின் இறுதி முடிவு எதிர்வரும் #திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போதே எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரிசி மற்றும் குழந்தைகளுக்கான பால்மா ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்காதிருக்க வாழ்க்கை செலவுகள் குழு தீர்மானித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவாலும் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழு யோசனை முன்வைத்துள்ளது.
அத்துடன், சமையல் எரிவாயுவின் விலையை 550 ரூபாவால் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெறுமாயின், ஒரு கிலோகிராம் பால்மாவின் விற்பனை விலை 1,145 ரூபாவாக நிர்ணயிக்கப்படும்.
அத்துடன், 50 கிலோகிராம் நிறைக்கொண்ட சீமெந்து மூடையின் விற்பனை விலை 1,050 ரூபாவாக நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருட்களை வர்த்தகர்கள் பதுக்க வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.